சவுதி அரேபியாவுக்கு செல்ல விசாக் கோரி விண்ணப்பிக்கும் இந்தியர்கள் காவல்துறையின் தடையில்லா சான்று சமர்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே நீண்டகாலமாக தொடரும், வலிமையான நல்லுறவு காரணமாக, இந்த விலக்கு அளிக்கப்படுவதாக டெல்லியில் உள்ள இந்தியாவிற்கான சவுதி அரேபிய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.
இதன் மூலம் விசா விண்ணப்பங்கள் விரைவாகப் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமைதியான முறையில் வாழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அந்நாட்டு அரசு, இதனை பாராட்டும் விதமாக விசா நடைமுறையில் சலுகை அளிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.
சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கை அந்நாட்டிற்கு பணி நிமித்தமாக செல்லும் இந்தியர்களுக்கு உதவியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் வெளியானது ‘கலகத் தலைவன்’ திரைப்படம்!
சவுதி அரேபியாவின் அறிவிப்பால், அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமல்லாது, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஷார்ஜா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும், புலம் பெயர்ந்த இந்திய தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன், சவுதி அரேபிய அரசுக்கும், தூதரகத்திற்கும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.