சிங்கப்பூரில் ஒருவருடைய சமயம், இனம் குறித்து தவறாக பேசுவது சட்டப்படி குற்றம். அப்படி இருக்கையில் இந்தியா ஆண் ஒருவரை தரக்குறைவாக பேசிய, தொழிற்கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் டான் பூன் லீ என்ற 61 வயது முதியவர் மீது வெறுப்பு பேச்சு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அங்குல்லியா பார்க் வட்டாரத்தில், 26 வயது டேவ் பிரகாஷ் எனும் இந்திய ஆண், லீயின் பேச்சுகளால் பாதிக்கப்பட்டார். பிரகாஷ், அப்போது தன்னுடைய சீன காதலியுடன் இருந்தார்.
அவரை பார்த்து கோபத்தில் திட்டிய லீ, நீ சிங்கப்பூரில் வசிப்பது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. உனக்கு எதிராக எனக்கு ஒன்றும் இல்லை.
ஆனால் நீ சீனப் பெண்களுக்கு வலை விரிக்கிறாய்..? அது சீனர்களுக்குப் பிடிக்காது என லீ கூறியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அந்தச் சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் அப்போது பரவலாகப் பகிரப்பட்டது. அதைத் தொடர்ந்து லீ பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இணையக் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு மதம் பற்றித் தகாத பதில்களைச் சொன்னதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
செல்போனில் 64 ஆபாசக் காணொளிகள் வைத்திருந்ததாக மேலும் ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். மொத்தமாக அவர் நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.