இந்தியாவின் 74- வது குடியரசுத் தினத்தையொட்டி, சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் நேற்று (25/01/2023) மாலை ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் (Shangri-La Hotel) விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில், சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங் (Singapore’s Minister for Trade & Industry Gan Kim Yong), நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் வான் ரிஷால் (Dr. Wan Rizal) மற்றும் யோ வான் லிங் (Yeo Wan Ling) ஆகியோர் கலந்துக் கொண்டனர். அவர்களை சிங்கப்பூருக்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி வரவேற்றார்.
சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசுத் தின விழா!
விழாவில், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது. சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், சிங்கப்பூர் ராணுவ, விமானப்படையின் உயரதிகாரிகள் என 200- க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
“சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களை நாங்கள் மனதார வாழ்த்துவதோடு, இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் வளர்ச்சி மற்றும் செழுமைக்கு அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்பிற்காகவும், இரு நாடுகளுக்கு இடையே நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை வலுப்படுத்துவதில் அவர்களின் பங்கிற்காகவும் நன்றி தெரிவிக்கும் ஒரு சந்தர்ப்பமாக இந்த விழா அமைந்தது.
சிங்கப்பூரில் உள்ள பெரிய, கடின உழைப்பாளி மற்றும் பன்முகத்தன்மைக் கொண்ட இந்திய சமூகத்தினருக்கு அவர்கள் அளித்த விருந்தோம்பல் மற்றும் எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவை வளர்த்ததற்காக சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.