இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு விதிக்கப்பட்டிருந்தத் தடை வரும் மார்ச் 27- ஆம் தேதி முதல் நீக்கப்படுவதாக இந்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020- ஆம் ஆண்டு மார்ச் 23- ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்தை இந்திய விமான போக்குவரத்துத்துறை நிறுத்தி வைத்திருந்தது. அதைத் தொடர்ந்து, மாதந்தோறும் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீடிக்கப்பட்டு வந்தது. எனினும், சரக்கு விமான போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மேலும், சிங்கப்பூர் உள்ளிட்ட 35 நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில், வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்துக்கு இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வரும் மார்ச் 27- ஆம் தேதி முதல் இந்தியாவில் பயணிகளுக்கான சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது.