சிங்கப்பூருக்கு வந்துள்ள இசைஞானி இளையராஜா, ரசிகர்களுக்கு வித்தியாசமான ஓர் இசை விருந்தைத் தாம் வழங்கப்போவதில் தமக்குச் சந்தேகமில்லை என்று நேற்று நடைபெற்ற செய்தியாளார் சந்திப்பில் கூறினார்.மேலும் ரசிகர்கள் இசையின் சுவையை உணர்வார்கள் என்றும் ஆர்வத்தைத் தூண்டி உறுதியளித்துள்ளார்.
ஸ்டார் விஸ்தா அரங்கில் நாளை ஆகஸ்ட் 20 நடைபெறவிருக்கும் ‘இசை ராஜாங்கம்’ நிகழ்ச்சியின் மற்ற சுவாரசியமான அங்கங்களைப் பற்றி அவர் விவரித்தார்.
தன்னுடைய உடம்பில் ஒவ்வொரு முறை இசையமைக்கும் போதும் அதிர்வலைகள் ஓடிக்கொண்டே இருப்பதாகக் கூறிய இசைஞானி,ஒவ்வொரு முறையும் புதிய இசையை அமைப்பதும் ரசிகர்கள் அதைக் கேட்டு இசையில் ஊறிக் கிடப்பதும் தான் வியக்கும் ஒன்று என்று கூறினார்.
தம்முடன் இணைந்து பணியாற்றும் இசைக்குழுவினரே இசை மழை பொழியவுள்ளனர் என்று தெரிவித்தார்.மேலும் புதிய பாடகர்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் திறமைமிக்க அந்தப் பாடகர்களை தாமே தேர்ந்தெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ‘அக்கரைச் சீமை அழகினிலே’ பாடல் கண்டிப்பாக இடம்பெறும் என்று குறிப்பிட்டார்.கிட்டத்தட்ட 5000 பேர் அமரக்கூடிய அரங்கில் இசை நிகழ்ச்சி நாளை நடைபெறும்.2018-க்குப் பின்னர் நடைபெறவுள்ள முதல் மாபெரும் தமிழ் இசை நிகழ்ச்சி இதுவாகும்.