இந்தியர்களின் பெருவிழாவான தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தாண்டு சிங்கப்பூரின்லிட்டில் இந்தியாவில் இந்தியப் பாரம்பரிய இசைக்கருவிகளைக் கருப்பொருளாகக் கொண்டு ஒளியூட்டு விழாவை கொண்டாட உள்ளது.செப்டம்பர் 16-ஆம் தேதி சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் ஆதரவோடு விழா நடைபெற உள்ளது.
பர்ச் சாலையில் விழா நடைபெற உள்ளது.இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்கிறார்.அவருடன் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா,சிங்கப்பூருக்கான இலங்கை,ஆஸ்திரேலியா,இந்தியத் தூதர்கள் போன்றோர் சிறப்பு வருகையாளர்களாக கலந்துகொள்வார்கள்.
ஒளியூட்டு விழாவிற்கு முன்னதாக,ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து செராங்கூன் சாலை முழுவதும் இசைக்கருவி வடிவிலுள்ள பலகைகளும் விளக்குகளும் பொருத்தப்படும்.இந்த ஒளிரும் விளக்கு அலங்காரங்களை தேக்கா சந்தையிலிருந்து ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் வரை காணலாம்.மேலும்,பொதுமக்களைக் கவரும் வகையிலான ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்று காரணமாக தீபாவளி நிகழ்சிகளை பெரிய அளவில் நடத்த முடியாமல் போனாலும்,இந்தாண்டு பொதுமக்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பல்வேறு நிகழ்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளதாக லிஷாவின் செயலாளரான ருத்திராபதி கூறினார்.