உணவருந்தும் நபர்கள் இனி மேசைகளைத் துடைத்து சுத்தம் செய்யத் தேவையில்லை என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு (NEA) கூறியுள்ளது.
சமீபத்தில், மேசையை சுத்தம் செய்வதில் ஆடவர் ஒருவருக்கும் இரண்டு NEA அமலாக்க அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான காணொளி ஆன்லைனில் வைரலானது.
95 வினாடிகள் கொண்ட இந்த காணொளியை khuranasahib_pb04 என்ற TikTok பயனர் கடந்த அக். 13 ஆம் தேதி வெளியிட்டார்.
அந்த காணொளியில், ஆடவர் ஒருவர் “நான் மேசையை அசுத்தமாக்கினால், நானே துடைக்க வேண்டும் என்று நீங்கள் என்னிடம் சொல்கிறீர்களா?” என்று அதிகாரியிடம் கேட்கிறார்.
அதற்கு NEA அமலாக்க அதிகாரி, “உங்கள் மேசையை சுத்தம் செய்யுங்கள்” என்று பதிலளித்தார். பின்னர் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த TikTok பயனர் காணொளி தலைப்பில் கூறியதாவது: தயவுசெய்து யாராவது சொல்லுங்கள், அதிகாரி சொன்னபடி மேசையையும் துடைப்பதும் என் கடமையா, என்றார்.
இந்நிலையில், இது குறித்து NEA இன்று காலை பேஸ்புக்கில் ஒரு செய்தியை வெளியிட்டது.
ஆன்லைனில் பரவும், தேக்கா நிலைய உணவகத்திற்கு (Hawker Centre) வெளியே நடந்த அந்த சம்பவம் குறித்து நாங்கள் அறிவோம் என்று NEA கூறியது.
மேசையை விட்டு செல்லும் போது கண்ணாடி கப்புகள் மற்றும் குளிர்பான கேனை சுத்தம் செய்யாததற்காக அந்த ஆடவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
உணவு அருந்தும் நபர்கள் சாப்பிட்ட பிறகு மேசைகளைத் துடைக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், யாரும் மேஜைகளில் அல்லது அதைச் சுற்றி குப்பைகளை விட்டுச் செல்லக்கூடாது என்பதை நினைவூட்ட விரும்புவதாக அது கூறியது.
இதில் காகித துடைப்பான் (tissues), ஈரமான துடைப்பான்கள் (wet wipes), பான கேன்கள் (drink cans), ஓடுகள் (shells) மற்றும் எலும்புகள் (bones) ஆகியவையும் அடங்கும்.
“நீங்கள் சென்ற பிறகு அடுத்ததாக உணவருந்த வரும் நபர்களுக்கு ஒரு மரியாதை செலுத்தும் விதமாக, மேசையை சுத்தமாக வைத்திருக்க ஊக்குவிக்கிறோம்” என்றும் அது குறிப்பிட்டது.
தற்செயலாக பானம் அல்லது கிரேவியை மேசையில் கொட்டுவது குற்றமல்ல என்பதும் சொல்லப்பட்டது.