கடந்த ஆண்டு ஜூன் 29- ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் செந்தோசாவில் உள்ள ‘ரூமர்ஸ் பீச் கிளப்’ (Rumours Beach Club In Sentosa) என்ற நிலையத்திற்கு வெளியே ரஹிமான் ரஹிம் (வயது 31) என்பவர் தனது 32 வயதான காதலி பெண்ணை சுமார் நான்கு நிமிடங்கள் தாக்கியுள்ளார். மேலும், காதலியின் தலை முடியைப் பிடித்து இழுத்து தலையில் உதைத்துள்ளார். படுகாயமடைந்த அந்த பெண் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் அன்றைய தினமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நிகழ்ந்த போது ரஹிமான் ரஹிம் முகக்கவசம் அணியாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ரஹிமானிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை கைது செய்து பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். காதலியை அடித்ததை ரஹிமான் ஒப்புக் கொண்டதையடுத்து, அவருக்கு இரண்டு மாத சிறைத்தண்டனையை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல், கடந்த 2019- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சைனா டவுன் பாயிண்டில் டாக்சி ஓட்டுநர் ஒருவரைப் பிடித்து கீழே தள்ளியது தொடர்பான மற்றொரு வழக்கில் ரஹிமானுக்கு 1,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனிடையே, சம்பவத்திற்கு பிறகு ரஹிமான் ரஹிமும், அவரது காதலியும் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.