மஹா சிவராத்திரி சிவபெருமானின் கொண்டாட்டங்களில் முக்கிய விழாவாகும். அமாவாசைக்கு முந்தைய சதுர்த்தசி திதியில் மாதந்தோறும் வரும் சிவராத்திரி அருவி. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி (பிப்ரவரி – மார்ச்) மஹா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. சிவபெருமான் தன் பக்தர்களுக்கு லிங்க வடிவில் அருள் புரிகிறார். அந்த வகையில், நடப்பாண்டில் மார்ச் 1- ஆம் தேதி அன்று மஹா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று (01/03/2022) இரவு முதல் விடிய விடிய சுவாமி அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும், கோயில்கள் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதேபோல், பரத நாட்டியக் கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அந்த வகையில், சிங்கப்பூரில் உள்ள கேய்லாங் ஈஸ்ட்டில் (24 Geylang East Ave 2) உள்ள ஸ்ரீ சிவன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. மஹா சிவராத்திரியையொட்டி, இக்கோயிலில் நேற்று (01/03/2022) இரவு முதல் சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெற்ற விழாவில், பக்தர்கள் பால் குடம் சுமந்து வந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் அமைச்சர் டான் சீ லெங் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சிவன் கோயில் நிர்வாகம் மற்றும் இந்து அறக்கட்டளை வாரியம் இணைந்து செய்திருந்தது.
ஸ்ரீ சிவன் கோயில் இன்று (02/03/2022) இரவு 08.00 மணி வரை திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.