மலேசியாவின் 15- வது பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் நவம்பர் 19- ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்த பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 21 வயதில் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் நான்கு மில்லியன் இளம் வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
மலேசியா பொதுத்தேர்தலில் வரலாறு காணாத போட்டி நிலவுகிறது. சிறிய கட்சிகள், பெரிய கட்சிகள் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. சமூக ஊடகங்களில் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன. வேட்பாளர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மிக முக்கிய பொதுத்தேர்தலாகப் பார்க்கப்படும் நிலையில், சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் வசிப்பவர்கள், சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும், மலேசியா நாட்டில் வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க ஏதுவாக வரும் நவம்பர் 18- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றும், நவம்பர் 19- ஆம் தேதி சனிக்கிழமை அன்றும் மலேசியா நாட்டில் பொதுவிடுமுறையாக அறிவித்தார் மலேசியா நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (Prime Minister Datuk Seri Ismail Sabri Yaakob).
அதேபோல், தனியார் வாகனங்களில் பயணம் செய்வோர் சுங்கவரி செலுத்த தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.