சிங்கப்பூரில் பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் சாதனங்கள், இணையம் மற்றும் அவற்றின் மூலம் வரும் வேலை வாய்ப்புகளை பெறுகின்றனர்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த வாய்ப்புகள் எல்லா மக்களுக்கும் கிடைப்பதில்லை, வறுமையின் பிடியில் வெளிநாடு பிழைக்க வரும் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கு இதுபோன்ற டிஜிட்டல் சாதனங்கள் கிடைப்பது அரிது.
அதை மாற்றும் நோக்கத்தில், வெளிநாட்டு ஊழியர் தொண்டூழிய குழுவான ItsRainingRaincoats (IRR) அமைப்பு வழங்கிய லேப்டாப்பைப் பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர் ஒருவர் புதிய வேலை ஒன்றை பெற்றுள்ளார்.
தற்போது அந்த ஊழியர் தனது சம்பளத்தை இரட்டிப்பாக்கியது பற்றிய மகிழ்ச்சியான கதையைப் பகிர்ந்துள்ளார்.
இத்தகைய டிஜிட்டல் சாதனங்கள் வெளிநாட்டு ஊழியரின் வாழ்க்கையில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எடுத்துக்காட்டி, குடியிருப்பாளர்கள் பயன்படுத்திய லேப்டாப்பை நன்கொடையாக வழங்குமாறு இந்த வாய்ப்பின் மூலம் IRR கேட்டுக்கொண்டுள்ளது.
இருமடங்கு சம்பளத்துடன் புதிய வேலை
திரு. S என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த வெளிநாட்டு ஊழியர், எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் டிப்ளோமா பெற்றவர், கடந்த 2019இல் சிங்கப்பூர் வந்துள்ளார்.
Work permit அனுமதி பெற்று, குறைந்த சம்பளத்தில் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு, பயன்படுத்திய லேப்டாப்பை IRR அவருக்கு வழங்கியுள்ளது.
பின்னர், அதன் மூலம் அவர் சிறந்த வேலையைத் தேடத் தொடங்கினார், ஏராளமான விண்ணப்பங்களை அனுப்பினார் மற்றும் பல நேர்காணல்களுக்குச் சென்றுள்ளார்.
இறுதியாக மூன்று மாதங்களுக்கு முன்பு, அவர் ஒரு புதிய வேலையைப் பெற்றார். அங்கும் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிகிறார், ஆனால் அவரது சம்பளம் இருமடங்காக அதிகரித்துள்ளது.
லேப்டாப் வழங்கியதற்காக IRRக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக அதன் தன்னார்வலருடன் திரு. S பகிர்ந்து கொண்டார்.