சிங்கப்பூரில் காணாமல் போன ஆடவர் ஒருவருடைய சடலம் லாசரஸ் தீவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போய் சுமார் 36 மணி நேரத்திற்குப் பிறகு, 43 வயதுமிக்க அந்த ஆடவரின் சடலம் நேற்று மார்ச் 29 காலை கண்டெடுக்கப்பட்டது.
அவரின் சடலம் அதிகாலை 2:50 மணியளவில் கடற்கரைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.
அவர், குர்னியா ஹார்திமன் சுமர்தி (Kurnia Hardiman Sumardi) என அடையாளம் காணப்பட்டார்.
லாசரஸ் தீவின் கடலில் நீந்தியபோது அவர் நீரில் மூழ்கி இறந்ததாக அவரின் உறவினர் ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் தெற்குத் தீவுகளில் ஒன்றான லாசரஸ் தீவுக்கு அருகே காணாமல் போன ஆடவர், கடலில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் வழக்கு குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாக போலீசார் அந்த ஊடகத்திடம் தெரிவித்தனர்.
இது தொடர்பான போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
என்ன நடந்தது?
சீன நாளிதழான ஷின் மின் டெய்லி நியூஸிடம் பேசிய அவரின் உறவினர் கூறியதாவது; கடந்த மார்ச் 27 அன்று குர்னியா தனது மனைவி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் அந்த தீவுக்குச் சென்றதாகக் கூறினார்.
குர்னியா தீவை விட்டு செல்வதற்கு முன், தாம் கடற்கரைக்கு செல்ல விரும்புவதாக குடும்பத்தினரிடம் கூறியதாக அவர் கூறினார்.
அதனை அடுத்து, குர்னியா நண்பகல் வேளையில் காணாமல் போனதாகவும் கூறப்பட்டுள்ளது.