குஜராத் மாநிலம், அகமதாபாத் மாவட்டம் அருகே உள்ள மோர்பி என்ற இடத்தில் ஆற்றுக்கு மேல் தொங்கு பாலம் ஒன்று அமைந்துள்ளது. 230 மீட்டர் நீளம் கொண்ட இந்த தொங்கு பாலம் (Morbi Bridge), பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (30/10/2022) சாத் பண்டிகை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும், அன்றைய தினம் மாலை 06.00 மணியளவில், 500- க்கும் மேற்பட்டோர், அந்த பாலத்தின் மீது குவிந்தனர்.
அப்போது, பாலத்தில் இருந்த மக்கள் உற்சாகத்தில் ஓடி விளையாடியுள்ளனர். இதனால், அந்த தொங்கு பாலமும் ஆடத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், என்ன செய்வது என யோசிப்பதற்குள் அவர்களின் எடையைத் தாங்க முடியாத மோர்பி தொங்கு பாலம் திடீரென அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது.
இந்தியாவையே உலுக்கிய இந்த பயங்கர விபத்தில் 130- க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அடிக்கடி வந்து போற இடம்தான்! – சிங்கப்பூரில் கடற்பசு இனத்தை பாதுகாக்க நடவடிக்கை
இது குறித்து தகவலறிந்த குஜராத் மாநில முதலமைச்சர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய அரசும், மாநில அரசும் நிவாரணம் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, தொங்கு பால விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டத் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அதேபோல், இஸ்ரேல், ரஷ்யா, ஓமன், சவூதி அரேபியா, ஜப்பான், போலந்து, பூடான், நேபாளம், ஏமன், மெக்சிகோ, பிரான்ஸ், கனடா, ஸ்வீடன், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி ஆடவர்: குற்றமற்றவர் என அதிரடி தீர்ப்பு
அதன் தொடர்ச்சியாக, மோர்பி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், இன்று (01/11/2022) இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியாவின் குஜராத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, இந்திய பிரதமருக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கடிதம் எழுதியுள்ளார்.
மும்பையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் நிலைமை குறித்து நெருங்கிய தொடர்பில் உள்ளது. காயமடைந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களில் சிங்கப்பூரர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் தற்போது இல்லை. அங்கு நிலவும் சூழல் குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இனி வரிசையில் நிற்கவேண்டியதில்லை: மருத்துவமனைகளில் முகங்களை ஸ்கேன் செய்யும் புதிய முறை
தூதரக உதவி தேவைப்படும் மும்பையில் உள்ள சிங்கப்பூரர்கள், மும்பையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்தை (Singapore’s Consulate-General in Mumbai) +91-82910- 32836 என்ற தொலைபேசி எண்ணிலோ (அல்லது) சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் +65 6379 8800/8855 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளது.