அடிக்கடி வெளியே செல்லும் 15 வயது மகளை ஆத்திரத்தில் தாக்கிய தாய்க்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.40 வயதான தாய் மகளின் நடவடிக்கைகளைக் கண்டு கோவத்தில் கத்தியால் மகளின் வலது தொடையில் குத்தினார்.மகளை வேண்டுமென்றே ஆயுதத்தால் தாக்கிய தாய்க்கு நேற்று 1 வருடம் இரண்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆறு மாதங்களுக்கு முன்பு ஜூன் 20.2022 அன்று அவரது மகள் தூங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த போது மது அருந்திக் கொண்டிருந்த தாய்,திடீரென ஆவேசமாகத் திட்டியுள்ளார்.தாய்க்கு போதை தலைக்கு ஏறியதால் தன் 21 வயது மூத்த மகளிடம் ” இவள் கொல்லப்பட வேண்டியவளா?” என்று இளைய மகள் குறித்து கேட்டார்.
தாயின் கோபம் தன்பக்கம் திரும்பிவிடும் என்று அஞ்சிய மூத்த மகள் பதிலளிக்காமல் மௌனம் காத்தாள்.பின்னர் சமையலறையை நோக்கிச் சென்ற தாய் கத்தியுடன் வெளியே வந்தார்.இளைய மகளின் அறையை நோக்கி வேகமாகச் சென்றார்.
இளைய மகளின் தொடையில் கத்தியால் குத்தியதில் இரத்தம் வழிந்தது.கத்தியால் தாக்க வந்தத் தாயை தடுக்க முற்பட்டபோது வலது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி உறவினர் பாதுகாப்பில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.