சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழிற்சபையின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். ‘சிக்கி’(SICCI) எனப்படும் வர்த்தக தொழிற் சபையின் புதிய தலைவராக நெய்ல் பரேக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் 2022ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரைக்கான புதிய நிர்வாக சபை தலைவர்களையும் அது தேர்ந்தெடுத்துள்ளது.
தற்பொழுது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரேக் இதற்கு முன்னதாக சிக்கியின் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார். அவர் இப்போது Pegasus நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ,ஐரோப்பிய சொத்து நிர்வாக நிறுவனமான ‘டிக்கெஹவ் கேப்பிட்டல் ’ நிறுவனத்தில் ஆசிய, ஆஸ்திரேலிய, நியூசிலாந்து வர்த்தக பங்குதாரராகவும் உள்ளார்.
அத்துடன் சிக்கி தனது நிர்வாக சபைக்கு புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளது. பரேக் உள்ளிட்ட 17 பேர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டதாக சிக்கியின் செய்தியாளர் அறிக்கை வெளியிட்டது. தேர்தலில் போட்டி இருந்திருந்தால் அந்த தேர்தல் ஜூன் 10 -ஆம் தேதி நடத்தப்பட்டிருக்கும். நான்காண்டு காலம் பதவி வகித்த டாக்டர் சந்துருவுக்கு அடுத்து பரேக் பதவி ஏற்கிறார்.
சிக்கி தலைவர்களின் பதவிக்காலம் இரண்டு தொடர்ச்சியான தவணைகளாக உள்ளன. ஒவ்வொரு தவணைக்காலமும் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும். புதுப்பிக்கப்பட்டுள்ள நிர்வாக சபையில் இரண்டு பெண் உறுப்பினர்கள் உள்ளதாக சந்துரு தெரிவித்தார் .சிங்கப்பூரின் இந்திய வர்த்தக சமூகத்தை வழிநடத்தி செல்லும் இளம் வர்த்தகத் தலைவர்களை வளர்ப்பதற்க்கு இந்த மாற்றம் அவசியமானது என்று அவர் கூறினார்.