இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125- வது பிறந்தநாள் நேற்று (23/01/2022) இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. நேதாஜியின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல், இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் நேதாஜியின் பிறந்தநாளை இந்திய தூதரகங்கள் சிறப்பாகக் கொண்டாடினர்.
தன் சொந்த மகன்களையே கொலை செய்த தந்தை – ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிங்கப்பூர் போலீஸ்
அந்த வகையில், சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம், நேதாஜியின் பிறந்தநாளையொட்டி, பள்ளிகளுக்கு இடையேயான ஓவியப் போட்டியை நடத்தியது. அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தற்காலிக பொறுப்பு இந்திய தூதர் சித்தார்த்தா நாத் (Acting High Commissioner Siddhartha Nath) சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
அதைத் தொடர்ந்து, நேதாஜியின் 125- வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், அவரது வாழ்க்கை மற்றும் சிங்கப்பூருடனான அவரது தொடர்பு பற்றிய சிறப்பு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய தூதரகத்தில் நேற்று (23/01/2022) காலை 11.30 AM மணிக்கு நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் தூதர் கேசவபாணி (Ambassador K Kesavapany), ஆசிரியர் டாக்டர்.மேராசந்த் (Author Dr Meira Chand), சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் டாக்டர் ராஜேஷ் ராய் (Dr.Rajesh Rai- Head Of The SASP, NUS) மற்றும் எழுத்தாளர், வரலாற்று ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு, நேதாஜியின் வாழ்க்கை மற்றும் அவரது பங்களிப்புகள் உள்ளிட்டவைக் குறித்து எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியானது இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் நேரலை செய்யப்பட்டது.