கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு உதவி செய்து வருகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, ரஷ்யா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ திரவ ஆக்சிஜன் நிரப்பிய டேங்கர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வருகின்றன. அதேபோல் உலகின் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களும் இந்தியாவிற்கு நிதி உதவியும் அளித்து வருகின்றன.
இந்த நிலையில் சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “கடந்த மே 29- ஆம் தேதி அன்று ஐஎன்எஸ் ஐராவத் இந்திய கடற்படையின் கப்பல் (INS Airavat Indian Navy) மூலம் 7 ஐஓஎஸ் ஆக்சிஜன் டேங்கர்கள், 2,272 ஆக்சிஜன் சிலிண்டர்கள் (இதில் 450 ஆக்சிஜன் நிரப்பப்பட்டவை), 10 வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவை அனைத்தும் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.