உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் சமூக பிரச்சனைகள் மற்றும் விரிசல்கள், பிரிவினைவாதங்கள் சிங்கப்பூரிலும் ஏற்படலாம் என்று பிரதமர் லீ சியென் லூங் எச்சரித்துள்ளார்.
தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் (NTUC) பேராளர் மாநாட்டில், எளிதில் பாதிக்கப்படக்கூடிய சிறிய நாடு சிங்கப்பூர் என்றும், மேலும் கவனமாக இல்லாவிட்டால் மோசமாக பாதிக்கப்படும் என்றும் பிரதமர் லீ கூறினார்.
இந்த நிச்சயமற்ற உலகச் சூழலில், பொருளியல் – தொழில்நுட்ப இடையூறுகள் ஏற்படும் வேளையில் மக்கள் செயல் கட்சிக்கும் (PAP) தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸுக்கும் (NTUC) இடையிலான பந்தம் நீடித்து வலுப்படவேண்டும், என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சிங்கப்பூரில் சமூக பிரிவினைகள் ஏற்படாமல் இருக்க இந்த உறவுகள் அடிப்படையானது என்றும் நாட்டின் பொருளியல், சமூக மேம்பாட்டுத் திட்டங்களை வகுக்கும்போது ஊழியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதி கூறினார்.
சிங்கப்பூரின் வளர்ச்சிக்குத் NTUC பங்கை பற்றி பிரதமர் லீ தனது உரையில் விளக்கினார். கூடுதலாக, 50 ஆண்டுகளுக்கு முன் PAP மற்றும் NTUC உறவு எப்படி நிலைத்திருந்ததோ, அதே போன்று தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்று பிரதமர் லீ தனது விருப்பத்தை பதிவு செய்தார்.