சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்கு அருகே இரவு நேரங்களில் சட்டத்திற்கு புறம்பாக வாகனங்கள் நிறுத்தப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.உட்லண்ட்ஸ் சாலையின் நடைபாதை,சிலேத்தார் லிங்க்,நார்த் கோஸ்ட் அவென்யூ போன்ற பகுதிகளில் கடந்த மாதத்தில் இருந்து ஒவ்வோர் இரவும் வாகனங்கள் நிருத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
வெளிநாட்டு ஊழியர்கள் வசிக்கும் கிராஞ்சி விடுதி 1க்கு அருகே வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியானது.சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால்,நடைபாதையில் செல்லும் பாதசாரிகளும்,சாலையின் ஓரங்களில் செல்லும் சைக்கிள் ஓட்டிகளும் சிரமப்படுவதாகக் கூறுகின்றனர்.
சில சமயங்களில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலும் இது போன்று வாகனகள் நிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.சிங்கப்பூரில் நடைபாதைகள்,போக்குவரத்து விளக்குக் கம்பங்கள்,பேருந்து நிறுத்தங்கள் மற்றும் சாலையோரம் உள்ள புல்வெளிகள் போன்றவற்றில் வாகனங்களை நிறுத்துவது சட்டவிரோதமாகும்.
விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.உட்லாண்ட்ஸ் சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறிய நிலப் போக்குவரத்து ஆணையம் வாகனங்கள் இவ்வாறு நிறுத்தப்படுவதை அறிந்திருப்பதாகக் கூறியது.சட்டவிரோத செயல்களுக்கு அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அது கூறியது.