நடப்பாண்டின் முதல் அரசுமுறை வெளிநாட்டு பயணமாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Prime Minister Lee Hsien Loong) இன்று (25/01/2022) காலை இந்தோனேசிய நாட்டின் பிந்தானுக்கு (Bintan) சென்றார். பிரதமருடன் சிங்கப்பூர் அரசின் மூத்த அமைச்சர்களும் உடன் சென்றிருந்தனர்.
பின்னர், பிந்தானில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை (Indonesian President Joko Widodo) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் பரவல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், பொருளாதாரம், பிராந்தியங்களில் நிலவும் சூழல், தொழில்நுட்பம், விமான போக்குவரத்து உள்ளிட்டவைக் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் கூறுகின்றன.
அதைத் தொடர்ந்து, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே உயர்மட்ட பேசசுவார்த்தையும் நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, இந்தோனேசிய அதிபர் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் ஆகிய இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதையடுத்து, இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதன்படி, Flight Information Region (FIR) Agreement, Extradition Treaty (ET), 2007 Defence Cooperation Agreement (DCA) ஆகியவை அடங்கும். இந்த ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் இறுதியில் இந்தோனேசியா நாட்டின் பாலியில் (Bali) நடைபெற உள்ள G20 உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறு இந்தோனேசிய அதிபர் விடுத்த அழைப்பை ஏற்ற சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், G20 அமைப்பின் தலைவர் பதவிக்கு இந்தோனேசியாவுக்கு சிங்கப்பூரின் ஆதரவைத் தெரிவித்தார்.