ஒருவகையான சிறிய காந்தப் பந்துகள், சிங்கப்பூரில் 9 வயது சிறுமியின் குடலைக் கிழித்துள்ளன.
காந்த பந்துகளை விழுங்கிய சிறுமி, அதனை யாரிடமும் கூறவில்லை. விழுங்கி இருப்பதை யாரும் அறிந்திடாத நிலையில் இரண்டு வாரங்களாக அப்படியே இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சிறுமி பச்சை நிறத்தில் வாந்தி எடுத்த போது மருத்துவர்கள் செய்வதறியாது தவித்தனர். எக்ஸ்-ரே சோதனை செய்து பார்த்ததில், சிறுமியின் உடலில் 14 காந்தப் பந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவை மேலும் வயிற்றில் இருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அவற்றை அகற்ற சிறுமிக்கு அவசர அறுவை சிகிச்சையும் செய்தனர்.
காந்தப் பந்துகள் உரசி உரசி வயிற்று பகுதியில் ஏற்படுத்திய சேதத்தால், சிறுமியின் சிறு குடலின் இரு பகுதிகளை வெட்டியெடுக்க வேண்டி நிலை உருவானதாக கூறப்பட்டது.
இதையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட தாம்சன் மருத்துவ நிலையத்தின் டாக்டர் நித்து ஜசம், சிறுமியின் தாயார் பிரேம்சந்த் ஆகிய இருவரும் இதுபோன்ற விளையாட்டுப் பொருள்கள் தடை செய்யப்படவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.