ஆகஸ்ட் 25 அன்றிரவு புக்கிட் தீமா விரைவுச்சாலையில் வாகனம் மோதி மான் ஒன்று மடிந்ததாக கூறப்படுகிறது.கிராஞ்சி விரைவுச் சாலைக்கு அருகில் உள்ள சாலையில் நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
விரைவாக வந்த வாகனம் மோதியதில் மான் சாலையில் விழுந்து கிடப்பது Tiktok-இல் பகிரப்பட்ட வீடியோவில் தெரிகிறது.சாலையின் ஓரிரு வழித் தடங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் Twitter பக்கத்தில் குறிப்பிட்டது.
வாகனம் மோதியதில் மான் நிலை தடுமாறி கீழே வீழ்ந்தது.மான் உயிருடன் இருந்தபோதிலும் அதற்கு உதவவோ அதைச் சாலையிலிருந்து அப்புறப்படுத்தவோ யாரும் முன்வரவில்லை என்று டிக்டாக் பயனாளர் கூறியுள்ளார்.விபத்து நடந்த பகுதியில் இருந்த சிலர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்ததும் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களின் படி மான் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
சிங்கப்பூரின் சாலைகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் அவ்வப்போது சாம்பார் வகை மான்கள் சுற்றித் திரிவதுண்டு.சில நேரம் விபத்துகளில் சிக்கிக்கொள்வதுண்டு.இந்த வகை மான்கள் 20-க்கும் குறைவாக இங்கு வசிப்பதாக கூறப்படுகிறது.