சிங்கப்பூரில் உள்ள ஜப்பான் தூதரகம், மறைந்த முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவாக, நாசிம் சாலையில் ஜூலை 12 மற்றும் 13ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரங்கல் புத்தகத்தை சிங்கப்பூரர்கள் கையொப்பமிட திறக்கிறது.
கையொப்பமிட சிங்கபூரர்கள் வருகை தர வேண்டிய இடம் – நாசிம் சாலையில் உள்ள ஜப்பான் கிரியேட்டிவ் சென்டர் (ஜப்பானிய தூதரகத்துடன் இதை குழப்பிக் கொள்ளவேண்டாம்)
இதற்கு முன் பதிவு தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்கிங் வசதி இல்லை என்பதை பார்வையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
67 வயதான ஷின்சோ அபே ஜூலை 8 ஆம் தேதி, ஜப்பானிய கடற்படையின் முன்னாள் வீரரால் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜூலை 10-ம் தேதி நடைபெறவிருக்கும் மேல்சபைத் தேர்தலுக்காக ஜப்பானின் நாரா நகரில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி வேட்பாளருக்கு அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போராடியுள்ளனர், ஆனால் சிகிச்சை பலனளிக்காததால் அவர் உயிர் பிரிந்தது. டோக்கியோவுக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு ஜூலை 12 அன்று இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.