2022 காமன்வெல்த் போட்டியில், நேற்று நடந்த பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் சிங்கப்பூர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. மூன்றாவது இடத்திற்கான பிளே-ஆஃப் போட்டியில் சிங்கப்பூர் 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
கலப்பு இரட்டையர் பிரிவில் டெர்ரி ஹீ மற்றும் ஜெசிகா டான் ஜோடி 21-17, 25-23 என்ற செட் கணக்கில் பென் லேன் மற்றும் லாரன் ஸ்மித் ஜோடியை வீழ்த்தி சிங்கப்பூருக்கு தொடக்கத்தில் முன்னிலை அளித்தது.
அடுத்த போட்டியில் சிங்கப்பூரின் பேட்மிண்டன் வீரரும் உலகளவில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் உலக சாம்பியனுமான லோ கீன் யூ, 54வது இடத்தில் உள்ள டோபி பென்டியை எதிர்த்து விளையாடினார். போட்டி சுவாரசியமாக சென்றது. முதல் செட்டை 25-23 என இங்கிலாந்து வீரர் கைப்பற்றிய நிலையில் இரண்டாவது செட்டை லோ 21-11 என கைப்பற்றினார். பின்னர் மூன்றாவது செட்டில் பென்டியை 25-23 என லோ கீன் யூ வீழ்த்தினார்.
சிங்கப்பூர் 2-0 என முன்னிலை வகித்த நிலையில், யோ ஜியா மின் 21-18, 21-14 என்ற செட் கணக்கில் ஃப்ரேயா ரெட்ஃபெர்னை வீழ்த்தி சிங்கப்பூருக்கு வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். இது 2022 காமன்வெல்த் போட்டியில் சிங்கப்பூர் பெற்ற நான்காவது பதக்கமாகும். ஏற்கனவே டேபிள் டென்னிஸ் மற்றும் நீச்சல் ஆகியவற்றில் பதக்கங்கள் கிடைத்தன.