இன்றைய காலகட்டத்தில் விமான தாமதங்கள் என்பது சாதாரணமான ஒன்று தான், இதற்காக பயணிகள் ஓரளவு பொறுமையை கடைப்பிடிக்க கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும், குறிப்பாக பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கும்போது பொறுமை என்பது இன்றியமையாத ஒன்று.
சிங்கப்பூரிலிருந்து புதுடில்லிக்குச் செல்லவேண்டிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் கிட்டத்தட்ட 17 மணி நேரம் தாமதமடைந்தது குறித்து நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
இருப்பினும், நெட்டிசன் ஒருவர், விமானம் 17 மணிநேரம் தாமதப்படுத்தியதால் தனது மகனின் விருது வழங்கும் விழாவை தவறவிட்டார், மேலும் இது குறித்து புகார் செய்வதற்காக தேசிய கேரியரின் பேஸ்புக் பக்கத்திற்கு சென்று, அத்துடன் முழு பணத்தைத் திரும்பப் பெறவும், மன்னிப்பும் கேட்கவும் வலியுறுத்தி பதிவிட்டார்.
அதற்கு நெட்டிசன்கள் பலர் பாதுகாப்பு உறுதி என்பது முதன்மையானது என்றும், இதற்காக முன்னுரிமை அளிப்பதில் விமான நிறுவனம் சரியாக செயல்பட்டதாகவும் வாழ்த்தினர்.
மோசமான வானிலை காரணமாக விமானம் கிளம்பும் நேரம் முதலில் தள்ளிப்போனதாக நிறுவனம் தெரிவித்தது.
அதன் பின்னர், மாலை 6 மணி அளவில் விமானம் பறக்க இருந்த வேளையில் அதில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாகத் தகவல் வந்ததாக நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால், விமானத்திலுள்ள கோளாற்றைப் பொறியாளர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. இருப்பினும், விமானத்தில் கோளாறு இருப்பதாக சிக்னல் விளக்குகளிலிருந்து தெரியவந்தது.
பிறகு காலை 7.30 மணிக்கு சாங்கி விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்புவதாக கூறப்பட்டது. மறுநாள் காலை விமானம் பறக்க தயாராக இருந்தபோது உடல் குறைபாடு காரணமாக விமானத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று சில பயணிகள் கேட்டுக்கொண்டனர். இதனால் விமானம் புறப்பட மீண்டும் தாமதமாகியதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், விமானம் புறப்படும் நேரம் தாமதமடைந்த ஒவ்வொரு முறையும் பயணிகளுக்கு உணவுப் பற்றுச்சீட்டு, போர்வை முதலானவை கொடுக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றை அடிப்படையாக வைத்து தங்களுடைய சேவையை மேம்படுத்துவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உறுதியளித்துள்ளது.