Covid-19 வைரஸ் தொற்றை விட அதன் உருமாறிய திரிபுகள் உலக மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. COVID-19 -ன் உருமாறிய திரிபுகளில் ஒன்றான ஓமிக்ரோனின் துணை வகைகளாக கூறப்படும் BA.4 மற்றும் BA.5 மாறுபாட்டால் மூன்று பேர் சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை அன்று (May 15) மூன்று வழக்குகள் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.BA.4 மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட 2 வழக்குகளும், BA.5 மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு உள்ளூர் வழக்கும் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு வகையான மாறுபாடுகளால் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ள முதல் வழக்குகள் இவையாகும்.கடந்த ஏப்ரல் மாதம் உலக சுகாதார நிறுவனம் அதன் கண்காணிப்பு பட்டியலில் BA.4 மற்றும் BA.5 ஆகிய மாறுபாடுகளை சேர்த்தது. மேலும் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் இந்த இரண்டு மாறுபாடுகளையும் கவலைக்குரிய மாறுபாடுகளாக சமீபத்தில் தெரிவித்தது.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தென்னாபிரிக்காவில் இரண்டு மாறுபாடுகளும் முதன்முதலில் கண்டறியப்பட்டன.கண்டறியப்பட்ட மூன்று வழக்குகளும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியது.
சுமார் 16 நாடுகளில் மே11 வரை BA.4 மற்றும் BA.5 தொற்றின் வழக்குகள் 1000 ஆக பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்பொழுது தொற்று வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை போன்றவற்றில் அதிகரிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும் .