சிங்கப்பூரைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் கடந்த மே 1ஆம் தேதி மலேசியாவுக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளை தவிர்க்க முயன்றதால் அந்த கார் திடீரென விபத்துக்குள்ளானது.
எண்ணெய் பனை தோட்டத்தில் தலைகுப்புற கவிழ்ந்த அந்த காரில் இருந்த குடும்ப உறுப்பினர்களை வெளியேற்ற அதன் கண்ணாடிகளை உடைக்க வேண்டியிருந்தது என்றும் ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து ஜொகூரில் உள்ள Kluang-ல் அன்று காலை 11:30 மணியளவில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு சுற்றுலா செல்வதற்காக அன்று அதிகாலை ஐந்து மணிக்கு குடும்பத்துடன் புறப்பட்டதாக கார் உரிமையாளர் 60 வயதான சு என்ற ஆடவர் ஷின் மின்னிடம் கூறினார்.
அவருடன் காரில் அவரது மனைவி, இரண்டு சகோதரிகள் மற்றும் அவரது மைத்துனர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களும், போக்குவரத்து போலீசாரும் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய குடும்பத்தை காரில் இருந்து பத்திரமாக காப்பாற்றினர்.
பின்னர் அவர்கள் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர், அதே நாளில் அவர்கள் வீட்டிற்கும் திரும்பினர்.