விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 3 இல் புகழ்பெற்ற போட்டியாளர்களில் இயக்குனர் சேரன் ஒருவர் ஆவார்.
16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அமைதியாலும், அறிவாலும் அனைவரையும் தன் வசம் கட்டிப்போட்டார் என்றே கூறலாம். ரசிகர்களால் சேரப்பா என்று அன்போடு அழைக்கப்படுபவர் இவர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர் சேரன் என்று அவரைப் போற்றும் விதமாக சிங்கப்பூர், தமிழகம் மற்றும் பெங்களூருலிருந்து சுமார் 100 பேர் நேரில் வந்து பாராட்டினர்.
பேஸ்புக்கில் பெண்கள் அமைப்பை நடத்திவரும் கல்பனா முத்துக்கிருஷ்ணனின் குழுவின் மூலமாக அளவற்ற அன்பும், பரிசுகளும் தமக்கு வழங்கப்பட்டதாக சேரன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
“கவிதை வாசிப்பு, பாடல் அரங்கேற்றம், நாட்டிய நிகழ்வு, கேக் கட்டிங்க் என மிரட்டிவிட்டார்கள். லவ்குரு அவர்களை அழைத்து சிறப்புரை ஆற்றவைத்து மனதில் இருந்த வலிகளுக்கெல்லாம் மருந்திட்டார்கள். பிக்பாஸ் வீட்டில் எனது பயணம் எத்தனை பேருக்கு ஆறுதலாக தூண்டுதலாக அமைந்திருக்கிறது என உணர்ந்தேன்” என்று கூறினார்.
“உலகம் முழுக்க இருந்து நேரில் வர முடியாத நேயர்களின் காணொளி என்னை கண்கலங்க வைத்தது. அத்தனை அன்புக்கும் நன்றி. அடுத்த பயணம் ஆரம்பம் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களால்.. அரவணைப்பால்” என்றும் கூறினார்.