இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கிப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்தியாவின் கொரோனா பரவலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ரஷ்யா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தியாவிற்கு திரவ மருத்துவ ஆக்சிஜன் டேங்கர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவையை சரக்கு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வருகின்றனர்.
அதேபோல், பல்வேறு முன்னணி நிறுவனங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் இந்திய அரசுக்கு கொரோனா நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் கூறுகையில், “ஒரு லாஜிஸ்டிக் மையமாக சிங்கப்பூர் விளங்குகிறது. சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் மூலம் தான் ஆக்சிஜன் டேங்கர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் பல்வேறு மருத்துவ உபகரணங்களும் இந்தியாவிற்கு விமானங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் அரசுக்கு ஆதரவாக உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, ‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் இயக்கப்பட்ட விமானங்களில் சுமார் 90,000 இந்தியர்கள் சிங்கப்பூரில் இருந்து விமானங்கள் மூலம் தாயகம் திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.