எங்கள் மக்களுக்கு இனி இது தேவையில்லை – உலக நாடுகள் வியக்க சிங்கப்பூர் அரசு முக்கிய தடை உத்தரவு!

காலையில் நாம் குடிக்கும் டீயில் தொடங்கி, நைட் குடித்துவிட்டு படுக்கும் ஒரு டம்ளர் பால் வரை அனைத்திலும் கலப்படம் செய்யப்படுகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்தும், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் மேலுள்ள நம்பிக்கையில் அதை சாப்பிடுகிறோம். வேறு வழியில்லை நமக்கு. சந்தைமயமாக்கப்பட்ட உலகத்தில், நீங்கள் கை வைக்கும் ஒவ்வொரு பொருளிலும் உங்களை கவர, ஈர்க்க, பழத்தை சுற்றும் ஈக்களாக மொய்க்க வைக்க ஏராளமான சித்து வேலைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஆரோக்கியத்தைப் பாதிக்கும் ஆபத்தான உணவுப்பொருள்களும் குளிர்பானங்களும் விற்பனை ரீதியாகத் தடை செய்யப்பட வேண்டியது அவசியம். விற்பனை இருக்கும். ஆனால், மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது மோசமான நிலைப்பாடு’ என்கின்றனர் உணவியல் நிபுணர்களும் சமூக ஆர்வலர்களும். உண்மைதான். சர்க்கரைச்சத்து அளவின் பயன்பாடு குறித்து ஏராளமான விழிப்புணர்வு பிரசாரங்கள் வந்துவிட்டன. ஆனாலும், அவற்றுக்கான வணிகரீதியான விளம்பரங்கள் ஓய்ந்தபாடாக இல்லை. அவற்றைப்பார்த்து, பின்பற்றும் குழந்தைப் பட்டாளமும் இளைஞர் கூட்டமும் மாறவில்லை. மீண்டும் மீண்டும் விஷத்தையே சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், ‘சர்க்கரைச்சத்து நிறைந்த குளிர்பானங்களுக்கான விளம்பரங்களை ஒளிபரப்பு செய்யத் தடை‘ எனக்கூறி, உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகியுள்ளது சிங்கப்பூர் அரசாங்கம். அச்சகம் தொடங்கி ஆன்லைன்வரை அனைத்துத் தளங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் எனக் கூறியுள்ளார், அந்நாட்டின் சுகாதாரம் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் எட்வின் டாங்.

இந்த அரசாணைக்காக, மக்களிடம் சர்வே ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. ‘மக்களின் முடிவைத்தான் நாங்கள் அமல்படுத்தியுள்ளோம்’ என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர் அதிகாரிகள். குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், இன்ஸ்டன்ட் காபி என அனைத்தின் விற்பனையுமே இதனால் பாதிக்கப்படும்’ என அரசு தெரிவித்துள்ளது.

தடையைத் தொடர்ந்து, சர்க்கரை சேர்த்து விற்பனைக்கு வரும் உணவுப் பொருள்களின் பேக்கிங்கின் முகப்பில், பிரத்யேக நிறக் குறியீடும் அந்த உணவுப் பொருளில் சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரையின் தர அளவும் குறிப்பிடப்பட வேண்டும் என்பதையும் சிங்கப்பூர் அரசு வலியுறுத்தியிருக்கிறது.