தான் எதற்காக சுவாசக் கருவியை அணிந்துள்ளார் என்பதை விளக்கும் வகையில் அடையாளப் பலகைகளை வைத்துள்ளார் சிங்கப்பூர் GRAB டிரைவர் ஒருவர். புகை மற்றும் வாசனை திரவியங்களுக்கு தனக்கு ஒவ்வாமை மற்றும் உணர்திறன் உள்ளதால் அவர் அவ்வாறு வைத்துள்ளார். பயணிகள் எளிதில் அறியும் வண்ணம் அவரது காரில் பல அடையாளப் பலகைகளுடன் காணப்பட்டார். மேலும் அவர் புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்குகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது காரில் பயணித்த TikTok பயனர் ஒருவர், தனது அனுபவத்தை 15 வினாடி வீடியோவில் பதிவு செய்துள்ளார், அந்த வீடியோ இதுவரை 13,800 பார்வைகளைப் பெற்றுள்ளது.
அந்த வீடியோவில், ஓட்டுநர் வாகனம் ஓட்டுகையில் சுவாசக் கருவியை அணிந்திருப்பதைக் காணலாம். இரு முன் இருக்கைகளின் பின்புறத்திலும், குறைந்தது மூன்று அடையாள பலகைகளை காணலாம். அவர் புகை, அந்துருண்டை வாசனை, மருந்து எண்ணெய்கள் மற்றும் வாசனை திரவியம் போன்றவற்றிற்கு ஒவ்வாமை மற்றும் உணர்திறன் உடையவர் என்று ஒரு அடையாளப் பலகையில் இருந்தது. தன்னால் சுவாசிக்க முடியவில்லை என்று மேலும் ஒரு பலகையில் எழுதியிருந்தார். மேலும், சிறந்த காற்றோட்டத்திற்காக ஜன்னல்கள் திறக்கப்பட்டு இருக்கும் என்றும் தனது பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்பதாகவும் அவர் கூறினார்.
மற்றொரு பலகையில், புகைபிடித்தலால் ஏற்படும் நோய்களை பற்றியும் அவை உருவாக்கும் அதிக அபாயத்தை பற்றியும் மற்றவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை பற்றியும் சுட்டிக்காட்டியிருந்தார்.