சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஜூலை 20- ஆம் தேதி காலை கனமழை கொட்டித் தீர்த்தது.
சிங்கப்பூரில் பெய்த கனமழை தொடர்பாக பொதுப் பயனீட்டுக் கழகம் எனப்படும் ‘PUB’, சிங்கப்பூரின் தேசிய நீர் நிறுவனம் (Singapore’s National Water Agency) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஜூலை 20- ஆம் தேதி வியாழன்கிழமை அன்று காலை சிங்கப்பூரின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் காலை 07.40 மணி முதல் காலை 11.30 மணி வரை 120.2 மி.மீ. கனமழை பதிவானது.
சிங்கப்பூரில் வழக்கமாக ஜூலை மாதத்தில் பதிவாகும் சராசரி மழையைக் காட்டிலும், 82% அதிகம் ஆகும். கனமழையைத் தொடர்ந்து, ‘PUB’ பல இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்திருந்தது. இந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறு அறிவுறுத்தியது.
அதன்படி, காலை 09.25 மணியளவில் சிம் டார்பி மையத்திற்கு (Sime Darby Centre) அருகில் 200 மீட்டர் நீளமுள்ள டன்யெர்ன் சாலையில் (Dunearn Road) திடீர் வெள்ளம் ஏற்பட்டது. ‘PUB’- ன் மீட்புக் குழு உதவி வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரண்டு போக்குவரத்துப் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. எனினும், 15 நிமிடங்களில் வெள்ள நீர் வடிந்தது. பின்னர், சாலை போக்குவரத்து வழக்க நிலைக்கு திரும்பியது.
வெளிநாட்டினர் இனி கட்டாய அனுமதி வாங்க வேண்டும் – சிங்கப்பூர் வெளியிட்ட அறிவிப்பு
கடந்த 2021- ஆம் ஆண்டு முதல் டன்யெர்ன் சாலை பகுதியில் வெள்ள அபாயத்தைத் தணிக்க ‘PUB’ இடைக்காலப் பணிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, சாலையின் ஒரு பகுதியை உயர்த்துவதும், அருகில் உள்ள புக்கிட் திமா கால்வாயை (Bukit Timah Canal) ஆழப்படுத்துவது இதில் அடங்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.