இவ்வாண்டு இறுதிக்குள், இல்லப் பணியாளர்களின் நலன் காக்க, மாதம் தோறும் அவர்களுக்கு ஒரு நாள் கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும்.
அத்துடன் 24 மணிநேர உதவி தொலைபேசி சேவை உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுக்க சிங்கப்பூர் அரசு முன்வந்துள்ளது.
மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் மே 22 அன்று செய்தியாளர்களிடம் பேசும் போது இதைத் தெரிவித்தார்.
இணையம்வழியாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் மே தின இல்லப் பணியாளர் கொண்டாட்டத்தில் அமைச்சர் இது பற்றி பேசினார்.
முதலாளிகள் தங்கள் இல்லப் பணியாளர்களுக்கு மாதம் ஒரு நாள் கட்டாயமாக விடுப்பு தரவேண்டும்.
இந்த புதிய விதிமுறையானது 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடப்புக்கு வரும்.
அந்த விடுப்பு நாளுக்கு பதிலாக, பணத்தைக் கொடுத்து அதனை ஈடுகட்ட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லப் பணியாளர்கள் தங்கள் விடுப்பு நாளை இன்னும் அர்த்தமுள்ள வழிகளில் செலவழிக்க உதவும் திட்டங்களும் நடவடிக்கைகளும் தொடங்கப்பட உள்ளது.
அதற்காக மனிதவள அமைச்சகம் இல்லப் பணியாளர்களுக்கு உதவும் அமைப்புடன் இணைந்து பணியாற்றவுள்ளது.
மேலும், இல்லப் பணியாளர்களுக்கு அவசர நேரத்தின் போது அவர்களது தாய்மொழியில் உடனடி உதவி வழங்கும் 24 மணி நேர உதவித் தொலைபேசி சேவையும் செயல்பாட்டுக்கு வர உள்ளது.