சென்னை விமான நிலையத்தில் கடத்தப்பட்ட சிங்கப்பூர் பயணி..!

File Photo: Chennai Airport

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் சென்ற பயணி, சென்னை விமான நிலையத்தில் கடத்தப்பட்டுள்ளது, விமான பயணிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடலூர் பகுதியை சேர்ந்த தணிகைவேலு (33 வயது) என்பவர் கடந்த 14ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் மூலம் சென்னை சென்றார். இதனை அடுத்து அவர் தங்கம் வைத்திருந்ததாகக் கூறி அவரை மர்ம கும்பல் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து, தணிகைவேலுவின் தந்தை கலியமூர்த்தி சென்னை விமான நிலைய போலீசாரிடம் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

இந்த கடத்தல் கும்பல் கலியமூர்த்தியிடம் கடத்தல் தொடர்பாக தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து மிரட்டியுள்ளனர், அவர்கள் கூறியது பின்வருமாறு;

“உங்கள் மகன் எங்களிடம் தான் இருக்கிறான். சிங்கப்பூரில் கொடுத்து அனுப்பிய தங்கத்தை அவன் தர மறுக்கிறான். தங்கம் காணாமல் போய்விட்டதாகச் கூறுகிறான். அதனால் அவனை கடத்தியுள்ளோம். உடனே 10 லட்சம் ரூபாய் தந்தால் விடுவிக்கிறோம், இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர்,” என்று கலியமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த கடத்தல் கும்பலை, சென்னை விமான நிலைய போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கடத்தல் சம்பவம், விமான பயணிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.