கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பகுதியில் விநோத் ராஜேந்திரன் தனது தோழியுடன் உணவருந்தச் சென்றார். அன்றைய நாள் அவருக்கு சவால் நிறைந்த ஒன்றாக மாறிவிட்டது.
இரவு உணவை முடித்துவிட்டு, திரும்பி வரும் நேரத்தில், அவர்கள் வரும் வழியில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. உடனே இருவரும் விரைந்து செயல்பட்டனர்.
அப்போது பெண் ஒருவரைப் பாலியல் கொடுமை செய்த ஆண், இவர்களைக் கண்டதும் தப்பி ஓடிவிட்டார்.
இருந்தும் விடாமல் துரத்திச் சென்ற விநோத், குற்றவாளியை மடக்கிப் பிடித்தார். அவருடன் வந்த தோழி பானு காவல்துறையினரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் பாலியல் கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்தனர்.
விநோத் மற்றும் அவரது தோழி வராமல் இருந்திருந்தால், நிலைமை விபரீதமாகி இருக்கும் என்று அழுதபடி பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
பொது உணர்வுக்கான விருதுகளுக்குத் தெரிந்தெடுக்கப்பட்ட ஆறு பேரில் விநோத்தும், அவரது தோழியும் தேர்வு செய்யப்பட்டனர்.
பொதுப் பாதுகாப்புக்குப் பங்களித்தமைக்காக சிங்கப்பூர்க் காவல்துறை இந்த விருதை வழங்கிக் கௌரவித்தது.
இது தவிர கடையில் திருடிய நபரை பிடித்துக் கொடுத்த ஒருவருக்கும், குற்றச்செயல்களைத் தடுப்பதில் துணைபுரிந்த மூன்று அமைப்புகளுக்கும் விருது நிகழ்ச்சியில் காவல்துறை விருதுகளை வழங்கியது.