சிங்கப்பூர் ஜனாதிபதியான ஹலிமா யாக்கோப் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஜனாதிபதி பதவியில் இருப்பார்.அதன் பின்பு அவரது ஜனாதிபதி பதவி காலாவதியாகும். அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தல் சிங்கப்பூரில் நடத்தப்பட வேண்டும்.
சிங்கப்பூரர்கள் அனைவரும் தவறாமல் தேர்தலில் தனது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் (ELD) தேர்தல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதி மற்றும் முதியோர் இல்லங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வாக்களிக்கும் வசதி ஏற்பாடுகள் குறித்து புதன்கிழமை அன்று (May 25) தேர்தல் துறை கருத்துக்களை கேட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், முதியோர் இல்ல இயக்குனர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் சிங்கப்பூரர்கள் போன்ற அனைவரிடமிருந்தும் பெறப்படும் கருத்துக்களை பொறுத்து ,இனி நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலின் போது இவை செயல்படுத்தப் படலாம் என்று ELD செய்தி தொடர்பாளர் கூறினார்.
இந்த இரண்டு வகையான வாக்களிப்புகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஆலோசனை தெரிவிக்கலாம். பொது கலந்தாய்வு குறித்த புதுப்பிப்பை ஜூலை மாதம் ELD வெளியிடும் என்று தெரிவித்தார்.
அயல்நாடுகளில் சுமார் 2,00,000 சிங்கப்பூரர்கள் வசித்து வருகின்றனர். 2020 ஆம் ஆண்டில் 6570 வாக்களிக்கும் வயதுடைய வெளிநாட்டு சிங்கப்பூரர்கள் இருந்தனர். வெளிநாட்டு வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அஞ்சல் மூலம் அனுப்புவதற்கு தபால் மூலம் வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்த ELD நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.