6 பேர் கொண்ட சிங்கப்பூர் குடும்பத்தினர் கடந்த அன்னையர் தினத்தன்று (May 7) மாலை 6:30 மணி அளவில் ஜோகூர் பாருவிற்கு காரில் சென்றனர். கணவன், மனைவி ,பெற்றோர்கள் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை கடந்தபோது சிக்கலை எதிர் கொண்டனர்.
அவர்களது கார் ஜோகூர் பாரு சோதனைச் சாவடியை வந்தடைந்தபோது ,அவர்கள் பாஸ்போர்ட்டுகளை சரிபார்த்து முத்திரை இடுவதற்கு அதிகாரிகள் யாரும் அங்கில்லை. எனவே, Touch n’ Go மூலம் சுங்க கட்டணத்தை செலுத்திவிட்டு , போக்குவரத்து கோனை அகற்றிவிட்டு தொடர்ந்து வாகனத்தை செலுத்துமாறு யாரோ ஒருவர் அவர்களிடம் கூறி இருக்கிறார்.
அவர்கள் கடைசியாக ஜோகூருக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதால், மலேசியாவின் சுங்க விதிமுறைகள் மாறிவிட்டன என்று எண்ணி சுங்கச் சாவடியை கடந்து சென்றுள்ளனர். அதன்பிறகு ஒரு சோதனைச்சாவடியில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டபோது ,குடும்பத்தினரின் பாஸ்போர்ட்டுகளில் சுங்கச்சாவடியில் சரிபார்த்ததற்கான முத்திரை ஏன் இல்லை என்று அங்கிருந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது உடனடியாக சோதனைச் சாவடியை கடக்க முடியாது என்றும்,அவர்கள் தவறவிட்ட பாஸ்போர்ட் நடைமுறைகளை சரிசெய்ய அலுவலகத்திற்கு செல்லவேண்டும் என்று அதிகாரி கூறினார். அலுவலகத்தில் அனைத்து பாஸ்போர்ட்டுகளையும் பிடித்து வைத்துக்கொண்ட அதிகாரி “இது மிகக் கடுமையான குற்றம்” என்று கூறினார்.
குற்றத்திற்கு அபராத தொகை RM 10000 (S$ 3160) என்றும், ஆனால் தனிப்பட்ட முறையில் செலுத்தினால் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் RM 100 (S$ 32) மட்டுமே ஆகும் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளார். தங்களுடைய வயதான பெற்றோர் மற்றும் குழந்தைகளை கருத்தில் கொண்ட சிங்கப்பூரர் நீண்டநேர வாதத்திற்கு பிறகு RM 200(S$63) லஞ்சமாகக் கொடுத்து சோதனைச் சாவடியை கடந்ததாக தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை விவரித்த சீனப் பத்திரிகையின் முகநூல் பக்கத்தில் ஜோகூர் முதல்வர் “லஞ்சம் பெற்ற அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் ” என்று கூறினார்.