சிங்கப்பூரின் டெமாசெக் பாலிடெக்னிக் கல்லூரியில் விலங்குநலத் தொழில்நுட்பப் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் ஜேடன் லார்சன் டன்னிங் ஒரு வித்தியாசமான இளைஞர் ஆவார்.
அவரது பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளார்.அவரது பதின்ம வயதிலிருந்தே அவரது பிறந்த நாளை பல்வேறு வகையாகக் கொண்டாடி வருகிறார்.ஒன்றுகொன்று வித்தியாசமாக இருந்தாலும் அவற்றில் அடிப்படையாக ஓர் ஒற்றுமையைக் காண முடியும்.
பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் ஆடம்பரச் செலவுகள் செய்து பணத்தை வீணடிப்பது போலல்லாமல் எந்த எதிர்பார்ப்பும் இன்றி பிறர் நலன் காக்கும் அம்சங்களை இவரது பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டிருக்கும்.அதற்குச் சான்றாக கடந்த ஆண்டு சிறப்புத் தேவையுடையோரை வேலையில் அமர்த்தியுள்ள சமூக நிறுவனத்தில் பிறந்தநாள் விழாவிற்கு உணவை வாங்கினார்.
2019-ஆம் ஆண்டு இவரது குடும்பத்தினர் இலங்கையின் வீதிகளில் காணப்படும் விலங்குகளுக்கான இருப்பிடத்தில் இவரது பிறந்தநாளன்று தங்கியிருந்தனர்.
அதேபோல்,இந்தாண்டு பிறந்தநாளில்,லிட்டில் இந்தியா வட்டாரத்தில் ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்திருக்கும் சகுந்தலாஸ் புட் பேலஸ் உணவகத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 12 பேருடன் தனது 18-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
இந்த 12 பேரும் கெப்பெல் கப்பல் பட்டறையில் பணிபுரியும் தமிழகத் தொழிலாளர்கள் என்பது சிறப்பம்சமாகும்.இவருடன் இவரது தாயார்,நண்பர்கள் மற்றும் தாத்தா,பாட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களுடன் கலந்து பேசி பழகுவது அப்படியொன்றும் சவாலானதாக இல்லை என்று அவரது தாயார் தெரிவித்தார். மேலும், அவர்களுடன் சிரித்துப் பேசி,படமெடுத்து மகிழ்ந்த தருணங்கள் மனநிறைவாக இருந்ததாகவும் கூறினார்.இந்தியாவில் இருக்கும் டன்னிங்கின் நண்பர்களுக்கு வீடியோ கால் செய்து வாழ்த்துச் சொல்ல சொன்னது நெகிழ வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.