அந்த மனசுதான் சார் கடவுள்… இலவசமாக பானங்களை வழங்கி மனதைக் கவர்ந்துள்ள மலாய் உணவுக் கடைக்காரர்!

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் சீனப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சீனக் கடைக்காரர்களால் நடத்தப்படும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருக்கும். தேநீர் கடைகளும் அவற்றில் அடங்கும். ஆகையால், தேநீர் வாடிக்கையாளர்கள் அன்றைய தினத்தில் எங்குச் செல்வதென்று தெரியாமல் இருப்பார்கள்.

இதனை மலாய் உணவை விற்கும் கடை அறிந்துள்ளது. எனவே, ஆண்டுதோறும் சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது அந்தக் கடையில் இலவசமாக காப்பி மற்றும் தேநீர் வழங்கப்படும். மேலும், இந்தக் கடையில் உணவு வாங்கச் சென்ற கோலின் இங் (Collin Ng) என்ற ஆடவர் தமது அனுபவத்தை முகநூலில் பகிர்ந்துள்ளார்.

கிடைத்துள்ள தகவலின்படி, இந்த Makanan Singapura கடையானது மெக்பர்சன் (MacPherson) வட்டாரத்தில் சர்க்கிட் ரோடு, புளோக் 89இல் இருக்கும் உணவங்காடியில் உள்ளது. அத்துடன் அங்கிருந்த தேநீர்க் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், மலாய் உணவுக் கடைக்காரர் பானம் வழங்க முன்வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முகநூலில் பதிவான கருத்துக்களின்படி, மலாய் உணவுக் கடைக்காரர் நினைத்திருந்தால் பானங்களை விற்பனை செய்து லாபம் ஈட்டியிருக்கலாம், ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.