சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்பு நிகழ்வுகளை நேரடியாகக் காண சிங்கப்பூரர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிற்பகல் 2 மணிக்கே திரண்டு விட்டனர்.பிற்பகல் 4 மணிக்கு நிகழ்சிகள் ஆரம்பம் என்றாலும் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே மக்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர்.
மரினா பே மிதக்கும் மேடை நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு பார்வையாளர்களுக்கு வாயிற்கதவுகள் திறந்துவிடப்பட்டன.பார்வையாளர்கள் உள்ளே செல்வதற்கு முன் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப் பட்டன.அவர்கள் உடன் எடுத்து வரும் உடமைகள் எக்ஸ்ரே ஸ்கேனர் மூலம் சோதிக்கப்பட்டன.மேலும்,அவர்களுக்கு ரொட்டி,தண்ணீர்,பிற அத்தியாவசியப்பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது.பெருந்தொற்று பரவலின் தீவிரம் அடங்கிய பிறகு நடைபெறும் மாபெரும் கொண்டாட்டம் என்பதால் சிங்கப்பூரர்களிடம் மிகுந்த ஆர்வம் தென்பட்டது.
சிங்கப்பூரின் 57-ஆவது தேசிய தினக் கொண்டாட்டங்களைக் காண 25,000 பார்வையாளர்கள் வரை திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது.மிதக்கும் மேடைக்குச் செல்வதற்கான வாயிற்கதவுகள் திறந்துவிடப்பட்டதும்,60 வயது மூதாட்டி முதலில் உள்ளே நுழைந்தார்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க நிறுத்தப்பட்டிருந்தனர்.கடலோரக் காவல்படை,கூர்க்கா காவல்படை ஆகியோரும் இவர்களுள் அடங்குவர்.ஆளில்லா விமானம் போன்றவை அந்தப் பகுதியில் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.