திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில், திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகளும், மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளும் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜூலை 06, ஜூலை 07 ஆகிய தேதிகளில் கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு மூன்று விமானங்களில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினர்.
அவர்களில் 8 பயணிகள் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்துக் கொண்டதையடுத்து, அவர்களை தனியாக அழைத்து சோதனை செய்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. வாசனை திரவிய பாட்டில் மற்றும் பெண்களுக்கான கைப்பை ஆகியவற்றில் தங்கத்தை தகடு வடிவிலும், குச்சி வடிவிலும் மறைத்துக் கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது.
அவற்றை முழுவதும் பரிசோதனை செய்த அதிகாரிகள், அந்த பயணிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1,338 கிராம் என்றும், அவற்றின் மதிப்பு ரூபாய் 79.12 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.