சிங்கப்பூரில் குறைந்த வருமானம் வாங்கும் ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் 80 வெள்ளியிலிருந்து 100 வெள்ளி வரை சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று தேசிய சம்பள மன்றம் பரிந்துரைத்துள்ளது.
மாதச் சம்பளமாக 2,200 வெள்ளி வரை ஈட்டுபவர்களுக்கு இவ்வூதிய உயர்வு பொருந்தும்.நிறுவனங்களில் அதிகரிக்கும் செலவினம் மற்றும் நிச்சயமற்ற வணிக வாய்ப்புகளும் இருப்பதால்,சம்பள உயர்வு நியாயமானதாகவும் நிலைத்தன்மை உடையதாகவும் இருப்பது முக்கியம் என்று தேசிய சம்பள மன்றம் வலியுறுத்தியுள்ளது.
நிறுவனங்கள் மோசமான வணிகச் சூழலை எதிர்கொண்டிருந்தால் மிதமான சம்பள உயர்வை வழங்கலாம் என்றும் இருப்பினும் அந்நிறுவனம் ஊழியர்களுக்கு மாறுவிகித சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் நேற்று நடைபெற்ற ஊதிய வழிகாட்டுக் கூட்டத்தில் மன்றம் குறிப்பிட்டது.
பெருந்தொற்றுப் பரவலின் போது,ஊழியர்கள் சம்பளக் குறைப்பு,ஊதிய முடக்கம்,நிறுவனச் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு ஆளாகினர்.நீக்குப்போக்கான சம்பள முறையை அமல்படுத்தாத நிறுவனங்கள் அனைத்தும் இந்தாண்டு அதனை மேற்கொள்ள வேண்டும் என்று மன்றம் வலியுறுத்தியது.