சிங்கப்பூரில் நாளுக்குநாள் பணியிட மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில் பணியிடப் பாதுகாப்பில் நிறுவனங்கள் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சமரசம் என்ற வார்த்தைக்கே இடமில்லை என்றும் ‘யூனிசன் கன்ஸ்ட்ரக்ஷன்’ என்ற கட்டுமானக் குத்தகை நிறுவனத்தின் இயக்குனர் கோ பூ குயி தெரிவித்துள்ளார்.
பணியிடங்களில் பாதுகாப்பை சோதனை செய்வதற்காக அவரது நிறுவனத்தில் தனித்துவமான குழு இயங்குவதாகத் தெரிவித்தார்.மேலும் பணியிட பாதுகாப்பு பணிகளுக்கு இவ்வளவுதான் செலவிட வேண்டும் என்ற வரையறை தமது நிறுவனத்தில் இல்லை என்று கூறினார்.
பணியிடங்களில் மரணம் ஏற்பட்டால் பணியை நிறுத்த அரசாங்கம் ஆணையிட்டால் தொடர்புடைய நிறுவனத்துக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் வெள்ளி இழப்பு ஏற்பட்டு விடும்.மேலும்,நேரம் வீணாகிவிடும்.நிறுவனம் சவாலான நிலைக்குத் தள்ளப்படும்.இவையனைத்தும் நமக்கு ஆரம்பத்தில் புரியாது என்றார்.
சிறுசிறு நிறுவனங்களில் கண்காணிப்பு கேமாராக்களைப் பொருத்துவது போதுமானதாக இருக்கும்.பாதுகாப்பு நடவடிக்கைகளில் இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அரசாங்கம் உற்பத்தித்திறன் தொழில்நுட்ப மானியம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
தொழிலில் நிலைத்திருக்க விரும்பும் உரிமையாளர்கள்,பணியிடங்களில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் வழங்க வேண்டும்.ஏனெனில்,ஓர் தொழிலாளர் உயிரிழந்தால் அவரின் குடும்பத்துக்கு யார் பதில் சொல்வது,என்ன நடந்தது என்பதை யார் விவரிப்பது என்பது பற்றி யோசிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.