பெற்ற தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன் : யிஷுனில் நடந்த துயரச்சம்பவம் !

yishun murder

தனது 47 வயது தந்தையை கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞர் இன்று (அக். 12) காலை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். இத்துயர சம்பவம் பிளாக் 653 Yishun அவென்யூ 4 இல் நிகழ்ந்துள்ளதாக சிங்கப்பூர் காவல் படையின் (SPF) செய்தி வெளியீட்டின்படி கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 10 இரவு 7:05 மணியளவில் காவல் உதவிக்கான அழைப்பு SPFற்கு வந்துள்ளது. போலீசார் அங்கு  வந்து பார்த்தபோது, ​​குடியிருப்புப் பகுதிக்கு வெளியே 47 வயது ஆடவர் அசையாமல் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் அவரது குடும்பத்தில் இளையவர் என்றும் அவருக்கு 27 வயதான மூத்த சகோதரி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று தனது மகனுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மகன் சமையலறைக்குள் சென்று கத்தியை எடுத்துக்கொண்டு தந்தையை துரத்தி தந்தையின் கழுத்து மற்றும் முதுகில் குத்தியுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் தந்தை படிக்கட்டு வழியாக தப்பித்து உதவிக்கு அழைக்க முயன்றுள்ளார். இருப்பினும், அதிக இரத்தப்போக்கினால் சரிந்த அவர் உயிர் பிரிந்தது.