இந்திய அணியைப் பற்றி பேச வேண்டிய மூன்று விஷயங்கள்!

Ind vs Eng, world cup 2019
Ind vs Eng, world cup 2019

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய கிரிக்கெட் அணி, இன்று(ஜூன்.30) இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அதற்கு முன்பாக, இந்திய அணியைப் பற்றி மூன்று விஷயங்களை நாம் பேச வேண்டி இருக்கிறது.

முதல் விஷயம் : விராட் கோலியின் தடுமாற்றம்

தலைப்பு பார்க்க சற்று ஆச்சர்யமாக தான் இருக்கும். ஆனால், அது உண்மை தான். இந்திய கேப்டன் விராட் கோலி தடுமாறுகிறார் தான். ரன்களை அடிக்க அல்ல… 70 ரன்களுக்கு மேல் அடித்தும், அதை சதமாக மாற்ற முடியாமல் தவிக்கிறார். விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் வரிசையாக நான்கு அரைசதங்களை அடித்திருக்கிறார். ஆனால், அதில் ஒன்றைக் கூட அவரால் சதமாக மாற்ற முடியவில்லை. ஒட்டுமொத்தமாக, அவரது கடைசி ஒன்பது அரைசதங்களில், ஒன்றைக் கூட அவரால் சதமாக மாற்ற முடியவில்லை.

அதுமட்டுமின்றி, அவரது ஸ்டிரைக் ரேட்டில் சுணக்கம் ஏற்பட்டு இருப்பதையும் நம்மால் காண முடிகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியை விடவும், இக்கட்டான சூழ்நிலையில் பல போட்டிகளில் களமிறங்கி இருக்கும் கோலி, தனது வழக்கமான அதிரடியான ஆட்டத்தையே வெளிப்படுத்தி ஆளுமை செலுத்தி இருக்கிறார். ஆனால், சமீப நாட்களாக அவர் சிறப்பாக விளையாடுகிறாரே தவிர, அவரால் ஆளுமை செலுத்த முடியவில்லை.

இரண்டாவது விஷயம்: தோனி

தோனி… தோனி பற்றி பேச நிறைய உள்ளது. ஆனால், சுருக்கமாகவே முடித்துக் கொள்ளலாம். அனைவரும் தோனியின் பொறுமையான ஆட்டத்தை விமர்சனம் செய்கிறார்கள். தோனி ஓய்வு பெற வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். தோனி ஓய்வுப் பெற வேண்டிய வயதில் உள்ளார் என்பது உண்மை தான். ஆனால், அவரது திறன் குறைத்துவிட்டதாக கூறுவது அப்பட்டமான முட்டாள் தனம் கலந்த கூற்று எனலாம். அவரது திறன் குறைந்து இருந்தால், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஓஷானோ தாமஸ் வீசிய கடைசி ஓவரில், இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டிருக்க மாட்டார்.

இங்கே, இவரது திறன் மீது நமக்கு சந்தேகம் இல்லை. அவரது நோக்கம் மீதே நமக்கு சந்தேகம் எழுகிறது. பேட்டிங் செய்ய வரும் போது அவரது நோக்கம் என்ன, வந்து செட் ஆகி விளையாடும் போதும் அவரது நோக்கம் என்ன, முடிக்கும் போது அவரது நோக்கம் என்ன என்பதே நமது கேள்வி.

விக்கெட்டுகள் ஒருபக்கம் சரியும் போது, அச்சரிவைத் தடுக்க நங்கூரம் போட்டு நிற்பது ஒரு ரகம். அந்த நங்கூரத்தை, 49வது ஓவர் வரை அவர் போடுவது எந்த ரகம்? 50வது ஓவரில் அவர் 16 ரன்கள் அடித்தார் சரி… அதனை 47வது ஓவரில் இருந்தே அவர் செய்யத் தொடங்கி இருக்கலாமே. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியிலாவது, தோனிக்கு பிறகு அடிக்க பேட்ஸ்மேன் இல்லை என்பதால், அவர் கடைசி ஓவரில் மட்டும் அடித்தார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தோனி, இதைத் தான் பெரும்பாலான போட்டிகளில் கடைப்பிடித்து வருகிறார்.

பேட்டையே பிடிக்கத் தெரியாத சில பந்து வீச்சாளர்களுக்கு, 49வது ஓவரில் சிங்கிள் கொடுத்தால், என்னவென்று சொல்வது? தோனியின் பேட்டிங்கை பார்க்கும் போது, அவர் மினிமம் கியாரண்டி கிரிக்கெட்டராக தன்னை உருமாற்றிக் கொண்டாரோ என்ற ஐயம் எழுகிறது. அதாவது, களத்திற்கு செல்வோம், 40 ரன்கள் அடிப்போம் (எத்தனை பந்துகள் என்பதற்கு கணக்கில்லை). முடிந்தால் கடைசிக் கட்டத்தில் அடிப்போம். இல்லையேல், 40 ரன்களில் வந்துவிடுவோம் என்று, மினியம் கியாரண்டி கிரிக்கெட்டராக ஆகிவிட்டார் போல. அவரால் பெரிய லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்பதைப் போல.

ஆனால், ஒன்று உறுதி. தோனிக்கான நேரம் வந்துவிட்டது. அதை அவர் புரிந்து கொள்வார் என நம்புவோம்.

இறுதியாக,

மூன்றாவது விஷயம் : இந்திய அணி

இந்திய அணியின் தற்போதைய கட்டமைப்பை நினைத்தால் உண்மையில் பயமாக இருக்கிறது. தோனி கேப்டனாக இருந்த போது, அவர் தனக்கென்று ஒரு அணியை உருவாக்கி வைத்திருந்தார். அதனை மிக பலமான செதுக்கி வைத்திருந்தார். ரோஹித், தவான், யுவராஜ், ரெய்னா, ஜடேஜா, அஷ்வின் என்று தனக்கென்று ஒரு அணியை கட்டமைத்து, அந்த அணியை வைத்தே வெற்றி வாகை சூடினார். அந்த ‘தனக்கென்ற’ அணியை கோலி உருவாக்கத் தவறிவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால், கோலியால் எந்த வீரர் திறமையானவர் என்பதை அறிவதில் சிக்கல் இருக்கிறதோ என்றும் தோன்றுகிறது. இல்லையெனில், விஜய் ஷங்கர், கேதர் ஜாதவ் போன்ற பிளேயர்களுக்கு உலகக் கோப்பை மாதிரியான பிரம்மாண்ட தொடர்களில் எப்படி வாய்ப்பு கொடுத்திருப்பார்?

விளைவு, ரோஹித், கோலி அவுட்டானால், இந்தியாவின் நிலைமை அவ்வளவு தான் என்று உருமாறி விட்டது. எதிரணி பவுலர்கள், இந்திய அணியின் மிடில் ஆர்டர் தான் எங்கள் இலக்கு என்று வெளிப்படையாகவே சொல்லும் அளவுக்கு மோசமாக வந்துவிட்டது இந்திய அணியில் நடுவரிசை மற்றும் பின் நடுவரிசை. தோனியால் முன்பு போல் செயல்பட முடியவில்லை. பாண்டியா தன்னால் முடிந்த பங்களிப்பை அளிக்கிறார். குறைந்தபட்சம் ரெய்னாவையாவது கோலி தயார் செய்திருக்க வேண்டும்.

இந்த உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா தோற்காத அணியாக இருக்கலாம். ஆனால், அது இந்தியாவின் முழுத் திறமையால் அல்ல, எதிரணியின் மோசமான செயல்பாடுகளால் தான்.

இப்போது இந்திய அணியன் பலம் என்றால் அது பவுலிங் மட்டுமே. ஒருவேளை, இந்தியா உலகக் கோப்பையை வென்றாலும் கூட, அது இந்தியாவின் பவுலிங்கால் தான் சாத்தியமாகும் என்பதே உண்மை!.