உலகக் கோப்பை 2019 தொடரில், நேற்று(ஜூன்.13) நாட்டிங்கமின் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறவிருந்த இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையேயான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால், போட்டி டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
உலகக் கோப்பை 2019 தொடர் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா – நியூஸி., போட்டி நடைபெறவிருந்த நாட்டிங்கம் மைதானத்தில் நேற்று விட்டு விட்டு மழை பெய்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் ட்விட்டர் தளத்தில், “மழை நின்றுவிட்டால், உள்ளூர் நேரப்படி மாலை 4.25 மணிக்கு டி20 ஆட்டமாக நியூசிலாந்து – இந்தியா போட்டி நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஒருக்கட்டத்தில் கனமழையாக பெய்யத் தொடங்கியது. இதனால் Out Field மிக கடுமையாக பாதித்தது. எனவே, மேற்கொண்டு போட்டியை நடத்த முடியாது என அம்பயர்கள் அறிவித்ததால், ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இதனால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 7 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும், இந்தியா 5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
அடுத்ததாக, வரும் மே.16ம் தேதி சனிக்கிழமை இந்தியாவும் பாகிஸ்தானும் மல்லுக்கட்ட இருப்பது குறிப்பிடத்தக்கது.