நான் செய்த சில தவறுகள் தான் எனக்கு பின்னடைவை ஏற்படுத்தியது – தோல்விக்கு பின் PV சிந்து பேட்டி!

It Went Wrong From My End: PV Sindhu Rues Mistakes in Indonesia Open Final Loss to Yamaguchi. (Photo Credit: @bwfmedia)

இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடைபெற்று வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் யமாகுச்சியுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில், முதல் 2 சுற்றுகளிலும் வெற்றிபெற்ற யமாகுச்சி சாம்பியன் பட்டம் வென்றார்.

யமாகுச்சிக்கு எதிராக 14 ஆட்டங்களில் மோதி அதில் 10-ல் சிந்து வெற்றி கண்டிருப்பதால் இந்த முறையும் ஆதிக்கம் செலுத்துவார், என்று எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

விறுவிறுப்பான நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 12-8 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்ற சிந்து, அந்த முன்னிலையை தக்க வைக்க தவறினார். அதன் பிறகு யமாகுச்சி 14-14 என்று சமனுக்கு கொண்டு வந்தார்.

இந்த சமயத்தில் சிந்து இரண்டு முறை பந்தை வெளியே அடித்து விட்டு எதிராளிக்கு புள்ளியை தாரைவார்க்க யமாகுச்சி மீண்டெழுந்தார். தொடர்ச்சியாக 6 புள்ளிகளை குவித்த யமாகுச்சி முதல் செட்டை தன் வசப்படுத்தினார்.

2-வது செட்டிலும் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினர். 4-4 என்று சமநிலைக்கு பிறகு யமாகுச்சியின் கை ஓங்கியது. யமாகுச்சி, இடைவிடாது அதிகமான ஷாட்டுகளை அடித்து அதன் மூலம் சிந்துவை தடுமாற வைத்தார்.

ஒரு புள்ளியை எடுக்க இருவரும் தொடர்ச்சியாக 51 ஷாட்டுகளை விளாசிய போது ரசிகர்கள் பரவசத்திற்கு உள்ளானார்கள். இந்த செட்டையும் தனதாக்கிய யமாகுச்சி 21-15, 21-16 என்ற நேர் செட் கணக்கில் சிந்துவை தோற்கடித்து கோப்பையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த ஆட்டம் 51 நிமிடங்கள் நடந்தது.

வெற்றி வாகை சூடிய யமாகுச்சி ரூ.60 லட்சத்தை பரிசுத்தொகையாக பெற்றார். இரண்டாவது இடத்தை பிடித்த சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கத்துடன் ரூ.29 லட்சம் கிடைத்தது.

37 ஆண்டுகால இந்தோனேஷிய பேட்மிண்டன் வரலாற்றில் இந்திய வீராங்கனைகளில் சாய்னா நேவால் மட்டுமே இதுவரை மகுடம் சூடியிருக்கிறார். அந்த வரிசையில் இணைவதற்கு கிடைத்த நல்ல வாய்ப்பை சிந்து கோட்டை விட்டு விட்டார்.

ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான 24 வயதான சிந்து இந்த ஆண்டில் எந்த சர்வதேச பட்டமும் வெல்லவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்விக்கு பிறகு சிந்து கூறுகையில், ‘யமாகுச்சி உண்மையிலேயே அபாரமாக ஆடினார். முதல் செட்டில் 2-3 புள்ளிகள் முன்னிலை பெற்ற நான் அதன் பிறகு செய்த சில தவறுகள் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. முதல் செட்டை நான் கைப்பற்றி இருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும். ஒட்டுமொத்தத்தில் இந்த தொடர் எனக்கு சிறப்பானதாகவே அமைந்தது. இதில் கிடைத்த அனுபவத்துடன் அடுத்த போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொள்வேன் என்று நம்புகிறேன். அடுத்து ஜப்பான் போட்டியில் பங்கேற்க உள்ளதாக கூறினார்.