உலகளவில் ‘ஃபேஸ்புக்’ பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதேபோல் போலி கணக்குகளை உருவாக்கி தேவையற்ற மற்றும் பொய்யான செய்திகளை பரப்புவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அந்நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் நடப்பு ஆண்டில் இதுவரை மட்டுமே 540 கோடி போலி கணக்குகளை (Fake Accounts) நீக்கி உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தவறான தகவல்களையும், வெறுப்பையும் பரப்பும் விதமாகவும் செயலபட்டதாக குறிப்பிட்டு, போலி பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போலி மற்றும் தவறான கணக்குகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை கண்டறிந்து தடுக்கும் திறனை நாங்கள் மேம்படுத்தியுள்ளோம். அதன் மூலம் ஒவ்வொரு நாளும் போலி கணக்குகளை உருவாக்க நினைக்கும் லட்சக்கணக்கான முயற்சிகளை தடுக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.