சிங்கப்பூரில் பார்வையற்ற முதியவர் சாலையை கடக்க உதவிய தமிழருக்கு அந்த நாட்டு அரசு பாராட்டி அன்பளிப்புகளை வழங்கியுள்ளது.
“தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடினார் நாமக்கல் கவிஞர்.
அந்த வகையில் உலக அரங்கில் கலாச்சாரங்களிலும், பண்பாட்டிலும் தமிழர்களுக்கு என்று தனி இடம் உள்ளது,. அந்த வகையில் சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழர் ஒருவர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் சிங்கப்பூரில் நில ஆய்வு உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த ஏப்ரல் 18ம் தேதி சிங்கப்பூரின் அங் மோ கியோ அவென்யூ பகுதியில் பார்வையற்ற முதியவர் சாலையை கடக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தார்.
இதை பார்த்த மணிகண்டன், அந்த முதியவரை கைப்பிடித்து அழைத்து சென்று பாதுகாப்பாக சாலையை கடக்க செய்தார்.
மேலும் அவரது விருப்பப்படி மருத்துவமனையில் கொண்டுபோய் விட்டார். இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்த வீடியோ வைரலாக பரவியது. சிங்கப்பூர் அரசின் மனித சக்தி துறையின் கீழ் இயங்கும் ‘ஏஸ்’ அமைப்பின் அதிகாரிகள், சமூகவலைதள வீடியோவை ஆதாரமாகக் கொண்டு மணிகண்டனை கண்டுபிடித்தனர்.
சிங்கப்பூர் அரசு சார்பில் அவரை கவுரவித்து அன்பளிப்பையும் வழங்கினர். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது