வெளிநாட்டில் வேலை உள்ளது என்று ஆசை வார்த்தை கூறி தமிழக இளைஞரிடம் ரூ 1.08 லட்சம் பணத்தை சுருட்டிக்கொண்டு மர்ம நபர் தலைமறைவு ஆகியுள்ளார்.
இந்நிலையில், இளைஞரிடம் பணத்தை மோசடி செய்து சுருட்டிக்கொண்டு ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த ஊழியர்… திருச்சி விமான நிலையத்தில் கைது – போலீசில் ஒப்படைப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவரது மகன் 38 வயதான சங்கர். சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வந்த இவருக்கு வெளிநாட்டில் “சிறந்த வேலை, அதிக சம்பளம்” என்ற ஆசை வார்த்தைகளுடன் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.
இதனை அடுத்து மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் சங்கர். அதில் அவரிடம் பதிவுக் கட்டணம், விசா கட்டணம் மேலும் நேர்காணல் ஆகிய நடைமுறைகள் இருப்பதால் பணம் செலுத்துமாறு மர்ம நபர் கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய அப்பாவி சங்கர், மோசடிக்காரன் கூறிய வங்கிக் கணக்கில் ரூ1.08 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார்.
பிறகு என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும், அதன் பிறகு மர்ம நபரிடமிருந்து சரியான பதில் வரவில்லை.
பின்னர் இது மோசடி என உணர்ந்த சங்கர், இது குறித்து தஞ்சாவூா் சைபர் போலீசிடம் புகார் செய்தார். கடந்த திங்கள்கிழமை வழக்குப் பதிந்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.